Archives: பிப்ரவரி 2020

ரகசியம்

சில வேளைகளில் என்னுடைய பூனை ஹீத்கிளிஃப், FOMO (Fear Of Missing Out) என்பதால் பாதிக்கப்படும். நாம் எதையாவது பார்க்காமல் விட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே வாழும் இந்த வியாதியினால், அது கஷ்டப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வரும் போது, ஹீத்கிளிஃப் வேகமாக வந்து, நான் வாங்கி வந்துள்ளவற்றை ஆய்வு செய்யும், நான் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும் போது, அது தன்னுடைய பின்னங்கால் பாதங்களில் நின்றுகொண்டு, நான் வைத்திருப்பவற்றை உற்றுப்பார்க்கும், நான் அவற்றை அதனோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கும். நான் அவற்றில், அதற்குப் பிடித்தமானதைக் கொடுக்கும் போது, அது, அதன் மீதுள்ள ஆர்வத்தை இழந்து, கோபத்தோடும், சலிப்போடும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.

எனக்கு அன்பான அந்த பூனையிடம், நான் கடுமையாக நடந்து கொள்வது ஒரு பாசாங்குத் தனம் தான். எனக்குள் இருக்கிற மேலும், மேலும் வேண்டும் என்கிற ஒரு திருப்தியற்ற பசி, என்னுடைய பூனையையும் தொற்றிக்கொண்டது. என்னுடைய திருப்தியற்ற பசியைக் குறித்து, நான் சிந்தித்துப் பார்க்கும் போது, “இப்பொழுது” என்பது எனக்குப் போதுமானதாக இல்லை. 

திருப்தி என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவதில்லை, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் (பிலி. 4:11). என்னென்ன காரியங்கள் நம்மை திருப்திபடுத்த முடியும் என்று நாம் நினைக்கிறோமோ, அவற்றை விடாப்பிடியாக அடைந்து விடுகிறோம், ஆனால் வேறொன்றைப் பார்த்ததும், நம்முடைய மனநிறைவு கலைந்துவிடுகிறது. இந்த திருப்தியற்ற நிலை, சில வேளைகளில் நம்மை பதட்டதிற்கு இழுத்துச் செல்கிறது. இதனால், அநேகரைக் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து நம்மை ஒதுக்கிக் கொள்கின்றோம்.

இன்னும் கூறுவோமேயானால், உண்மையான சந்தோஷத்தை அநுபவிப்பதற்குப் பதிலாக, எதைக்குறித்து பயப்பட்டோமோ, அதையே அநுபவிக்கின்றோம். வாழ்வில் மிக மோசமான விளைவுகளை அநுபவித்த பின்பு, பவுல் உண்மையான திருப்தியின் “இரகசியத்தை” வெளிப்படுத்துகின்றார் (வச. 11-12). முழுமையான திருப்தியைப் பெற நாம் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் தேவனிடம் ஒப்படைக்கும் போது, நம்மால் விளங்கிக் கொள்ளமுடியாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்கின்றோம் (வச. 6-7). கிறிஸ்துவின் ஆழமான வல்லமைக்குள்ளும், அழகிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இழுத்துக் கொள்ளப்படுவோம்.      

நிலைத்திருக்கும் விசுவாசம்

எர்னஸ்ட் ஷக்கில்டன் (1874-1922), 1914 ஆம் ஆண்டு, அண்டார்டிக்கா சமுத்திரத்தைக் கடக்கும் முயற்சியில், ஒரு குழுவினரை வழிநடத்தினார். இதற்காக ஆயத்தப்படுத்தின கப்பலுக்கு “எண்டியுரன்ஸ்” (சகிப்புத் தன்மையுடையது) என்று பெயரிட்டார். அந்தக் கப்பல், வெட்டெல் கடலில், கடுமையான பனியில் அகப்பட்டுக் கொண்டது. அவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு அதிக சகிப்புத்தன்மையோடு ஓட வேண்டியதாயிற்று. அவர்கள் உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த வகையிலும் முடியாத நிலையில், ஷக்கில்டனும் அவருடைய குழுவினரும், உயிர் காக்கும் படகுகள் உதவியால் அருகிலுள்ள யானைத் தீவின் கரையை அடைந்தனர். அக்குழுவின் அநேகர் அத்தீவிலேயே தங்கிவிட, ஷக்கில்டனும் மேலும் ஐந்து பேரும், இரண்டு வாரங்கள் நடந்து, 800 மைல்களைக் கடந்து, தெற்கு ஜியார்ஜியாவை அடைந்தனர். அங்கு வந்த பின், தங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு உதவியைப் பெற்றளித்தனர். தோல்வியடைந்த அவர்களின் பிரயாணம், வெற்றியாக முடிந்து, சரித்திரத்தில் இடம் பிடித்தது. ஷக்கில்டன் குழுவினர் அனைவரும் தப்பிப் பிழைத்ததால், அவர்களின் தைரியத்தையும், சகிப்புத்தன்மையையும் நன்றியோடு நினைப்போம்.

அப்போஸ்தலனாகிய பவுல், சகித்தலை நன்கு அறிவார். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக, ஒரு விசாரணைக்கு ரோமாபுரிக்குச் சென்ற போது, அவர் சென்ற கப்பல் கொடிய புயலில் சிக்கிக் கொண்டது. தேவதூதன் மூலம் அந்தக் கப்பல் மூழ்கிப் போகும் என்பதை பவுல் அறிந்து கொண்டான். பவுல் அக்கப்பலில் பிரயாணம் செய்த அனைவரையும் ஊக்கப்படுத்தி, கரையை அடையச் செய்தார். அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வர் என்ற வாக்கிற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார். அவர்களின் கப்பல் மட்டும் சேதமானது (அப். 27:23-24).

பேரழிவுகளை நாம் சந்திக்கும் போது, தேவனாகிய கர்த்தர் அனைத்தையும் உடனே சரியாக்கி விட வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் தேவன் நம்பிக்கையைக் கொடுத்து, நாம் சகித்து வளரும்படி செய்கிறார். பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும் போது, “உபத்திரவம் பொறுமையை………உண்டாக்குகிறது” (ரோம. 5:3) என்கிறார். எனவே, கடினமான நேரங்களில் தேவன் மீது நம்பிக்கையாயிருந்து, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.

எதிர்பாராத மாற்றம்

1943 ஆம் ஆண்டு, தெற்கு டக்கோட்டாவிலுள்ள ஸ்பியர்ஃபிஷ் என்ற இடத்தை வறண்ட காற்று தாக்கிய போது, அங்கு வெப்பநிலை,-4F இருந்து 45F (-20 டிகிரி C இருந்து 7டிகிரி C) ஆக உயர்ந்தது. இந்த திடீர் வானிலை மாற்றம், 49 டிகிரி வெப்பநிலை உயர்வு இரண்டே நிமிடங்களில் ஏற்பட்டது. இந்த பயங்கர வெப்பநிலை மாற்றம், அடுத்த 24 மணி நேரங்களில் வியத்தகு வகையில் 103 டிகிரிகள் உயர்ந்தது என அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது! 1972 ஆம் ஆண்டு, ஜனவரி 15 ஆம் நாள், லோமா, மான்டனா ஆகியோர் அவ்விடங்களில் வெப்பநிலை -54 டிகிரியிலிருந்து 49 டிகிரி ஃபாரன்கீட் (-48 டிகிரியிலிருந்து 9 டிகிரி செல்ஸியஸ்) ஆக உயர்ந்தது எனக் கண்டனர்.

இவ்வாறு ஏற்படும் திடீர் மாற்றங்கள் வெறுமனே வானிலையில் மட்டும் நிகழ்வன அல்ல, சில வேளைகளில் வாழ்க்கையையே மாற்றுகின்றன. இப்படியிருக்க, “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப்போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து, சம்பாத்தியம் பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள், நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே” (4:13-14) என்று யாக்கோபு நினைவுபடுத்துகின்றார். எதிர்பாராத நஷ்டம், வியப்பூட்டும் மருத்துவ அறிக்கை, பொருளாதார திருப்பங்கள் என்பதைப் போன்ற திடீர் மாற்றங்கள் ஏற்படலாமே.

நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் அநேக எதிர்பாராத காரியங்கள் நிகழலாம். இதனாலேயே, ஆண்டவருடைய சித்தத்தை எண்ணத்தில் கொள்ளாத “வீம்பு காரியங்களை” விட்டுத் திரும்புங்கள் (வச. 16) என்று யாக்கோபு கூறுகின்றார். அவர் நமக்குத் தரும் ஆலோசனையின் படி, “ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” (வச. 15) என்கின்றார். நம் வாழ்வின் காரியங்களெல்லாம் உறுதியற்றவை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நம் வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகளின் மத்தியில், நம்முடைய தேவன் நம்மை ஒருபோதும் விட்டு விலகுவதில்லை, நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே.

மகிழ்ச்சிதரும் எண்ணங்கள்

What We Keep (வாட் வி கீப்) என்பதில் பில் ஷாப்பிரோ என்பவரின் நேர்முகத் தேர்வுகளைப் பற்றிய தொகுப்பு உள்ளது. இதில் வரும் ஒவ்வொரு நபரும், என்றும் மறக்க முடியாததும் மகிழ்ச்சி தருவதாகவும் உள்ள முக்கியமான அநுபவங்களைக் கூறுகின்றனர்.

இது, என்னுடைய அநுபவத்திலும், நான் மிக முக்கியமானதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் கருதும் காரியங்களைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவைகளில் ஒன்று, நாற்பது ஆண்டுகளைத் தாண்டிய, என்னுடைய தாயார் கைப்பட எழுதிய, சமையல் குறிப்பு அடங்கிய ஓர் அட்டை, மற்றொன்று, என்னுடைய பாட்டியம்மாவின் இளம்சிவப்பு நிற காப்பி கோப்பைகள். சிலர் தங்கள் நினைவில் சில காரியங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள். தங்களைப் பாராட்டி ஊக்கப்படுத்திய வார்த்தைகள், பேரப்பிள்ளைகளின் சிரிப்பு அல்லது வேதாகம வார்த்தைகள் வெளிப்படுத்தின சில உட்கருத்துகள் போன்றவற்றை நினைவில் வைத்திருப்பார்கள்.

நாம் நம்முடைய இருதயத்திற்குள் எவற்றைத் தேக்கி வைத்துள்ளோம்?  நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியற்ற கணங்களையா: பதட்டம் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது, அது எந்த வேளையும் வெளிப்படலாம், கோபம் மேலாக இருக்கிறது, அது தாக்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறது, மனக் கசப்புகள் அமைதியாக இருதயத்திற்குள் இருந்து, நமது சிந்தனைகளை அரித்துக் கொண்டிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பி சபை மக்களுக்கு நேர்மையான “சிந்தனைகளைக்” குறித்து எழுதுகின்றார். அவர் அந்த மக்களிடம், எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், எல்லாரிடமும் சாந்த குணத்தைக் காட்டுங்கள், எல்லாவற்றையும் ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப் படுத்துங்கள் என்று கூறி உற்சாகப் படுத்துகின்றார் (பிலி. 4:4-9).

நாம் எவற்றைச் சிந்திக்க வேண்டும் என்று பவுல் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், நமக்குள்ளேயுள்ள இருளின் சிந்தைகளை அகற்றி, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும், சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் (வச. 7). நம்முடைய சிந்தைகளை உண்மை, உயர்ந்த எண்ணங்கள், நேர்மை, தூய்மை, அன்பு நிறைந்த, நேசிக்க கூடிய, போற்றக் கூடிய எண்ணங்களால் நிரப்புவோமேயானால், அவர் தரும் சமாதானம் நம்முடைய இருதயங்களை நிரப்பும் (வச. 8).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.